டிக்கெட் ரத்து செய்வதன் மூலம் ரயில்வேயின் வருமானம் மற்றும் வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில்களுக்கான புதிய ரீஃபண்ட் விதிகள் குறித்து ரயில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
டிக்கெட் ரத்து செய்வதன் மூலம் ரயில்வே ஆண்டுதோறும் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது என்பது குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த ரயில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மண்டல வாரியாக (Zone-wise) தனித்தனி வருவாய் கணக்குகள் பராமரிக்கப்படுவதில்லை என்று கூறினார். இருப்பினும், சாதாரண மற்றும் பிரீமியம் ரயில்களுக்கான ரத்து விதிகளை அவர் விளக்கமளித்துள்ளார்.
சாதாரண ரயில்களில், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன ரயில்களுக்கு விதிகள் மிகவும் கடுமையானவை. இந்த ரயில்களில் 72 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் 25% கட்டணமும், 72 முதல் 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50% கட்டணமும் பிடிக்கப்படும். 8 மணி நேரத்திற்கு குறைவான நேரத்தில் ரத்து செய்தால் எந்த ரீஃபண்டும் கிடைக்காது.
டிக்கெட் கருப்பு சந்தையில் விற்கப்படுவதைத் தடுப்பதற்கும், இடைத்தரகர்களின் முறைகேடுகளைக் குறைப்பதற்கும் இந்த கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் உண்மையான பயணிகளுக்கு எளிதாக உறுதி செய்யப்பட்ட இடங்கள் கிடைக்கும்.