கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் காவல் நிலைய சித்திரவதையால் பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், சிவில் போலீஸ் அதிகாரி எஸ். ஸ்ரீஜித் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முறையான விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொல்லத்தின் குண்டாராவில், காவல் நிலைய சித்திரவதையால் 39 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சிவில் போலீஸ் அதிகாரி எஸ். ஸ்ரீஜித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாஜி சுகுணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முறையான உடல் பரிசோதனை செய்யாமலும், மருத்துவச் சான்றிதழ் பெறாமலும் நபரைத் தடுத்து வைத்தது மற்றும் அவர் உடல்நலக்குறைவாக இருந்ததையும் கண்டுகொள்ளாமல் இருந்தது போன்ற கடுமையான விதிமீறல்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
ஜூன் 16 அன்று காணாமல் போன இரண்டு மாணவர்களைப் விசாரிப்பதற்காக சியத் என்ற பேருந்து ஓட்டுநர் நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டார். குழந்தைகள் மீட்கப்பட்ட பிறகு அவர் விடுவிக்கப்பட்டாலும், அவரது உடல்நிலை மோசமடைந்தது. சியத்தின் மகள் வெளியிட்ட ஆடியோ பதிவில், காவல் வாகனத்திற்குள் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் சிபிஓ ஸ்ரீஜித் ஆகியோர் தனது தந்தையைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தொடர் நடவடிக்கைக்குப் பிறகு மாநில உள்துறை அமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.