காசாவில் நிலவும் இனப்படுகொலைச் சூழலிலும் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி வருவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலையில் இஸ்ரேலிய ராணுவம் பயன்படுத்தும் அபாயம் உள்ள போதிலும், இந்தியா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இந்தியா இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையுடன் மிகவும் நெருக்கமான மற்றும் லாபகரமான உறவை வைத்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அம்னெஸ்டி ஆய்வாளர்கள் அக்டோபர் 7, 2023 முதல் இந்தியாவிடமிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 2,596 ஆயுத மற்றும் பாகங்களின் ஷிப்மென்ட்களை ஆய்வு செய்தனர். இதில் சிறு ஆயுதங்களின் பாகங்கள், வெடிமருந்து பாகங்கள் மற்றும் இராணுவ வாகனங்களின் பாகங்கள் ஆகியவை அடங்கும். இந்திய நிறுவனங்கள் இஸ்ரேலிய ஆயுத உற்பத்தியாளர்களுக்குத் தேவையான முக்கியப் பொருட்களை விநியோகிப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.