குவாத்தமாலாவின் ஃபுயெகோ எரிமலையிலிருந்து சாம்பல் மற்றும் சேறு வெளியேறுவதால் 1,700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அடுத்த 72 மணிநேரம் மிகவும் முக்கியமானதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
மத்திய அமெரிக்காவின் மிகவும் செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றான ஃபுயெகோ எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, மூன்று கிராமங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1,700 பேர் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். எரிமலையிலிருந்து 7 கிமீ நீளத்திற்கு சேறு மற்றும் சாம்பல் வெளியேறி வருவதால், மழை பெய்தால் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று பேரிடர் மேலாண்மை முகமை எச்சரித்துள்ளது.
சாம்பல் படிவத்தால் சுமார் 29,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எரிமலையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலை 14 மூடப்பட்டுள்ளதுடன், அருகில் உள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பசிபிக் 'நெருப்பு வளையத்தில்' அமைந்துள்ள குவாத்தமலா அடிக்கடி இத்தகைய இயற்கை பேரிடர்களைச் சந்தித்து வருகிறது.