காஸ்பியன் கடலில் உள்ள தனது வணிகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் மாலுமி ஒருவர் பலியானதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் தாக்குதல்களை நடத்த ஈரானுக்கு ரஷ்யா செயற்கைக்கோள் படங்களை வழங்கி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
காஸ்பியன் கடலில் உள்ள ஈரானிய வணிகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலை ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மாலுமி கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானுக்கான உக்ரைனின் தூதர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, காஸ்பியன் கடலில் ஈரானுடன் தொடர்புடைய ராணுவ சரக்கு கப்பல்கள் மீது உக்ரைன் நடத்திய நீண்ட தூர தாக்குதல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யா தனது போரில் ஈடுபடுத்துவதற்காக 30,000 வடகொரிய வீரர்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். இதற்கிடையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஜாபோரிஜியா பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், உக்ரைன் தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.