அமெரிக்காவுடன் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்க ஓமனுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது. இந்த நீரிணைப்பு முழுமையாக திறக்கப்பட வேண்டுமெனில் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணைப்பு தொடர்பாக ஓமனுடன் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்ட ஈரான் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இருப்பினும், இந்த மூலோபாய நீரிணைப்பு முழுமையாக மீண்டும் திறக்கப்படுவது அமெரிக்கா வழங்கும் சலுகைகளைப் பொறுத்தே அமையும் என்று உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓமனுடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மிக நெருக்கமான நிலையில் உள்ளதாகவும், ஆனால் ஜூன் மாத புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU)படி அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறியுள்ளார்.
இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கூறுகையில், ஹார்முஸ் நீரிணைப்பு மீண்டும் திறக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட வழிமுறையைப் பொறுத்தது என்றும், இது ஓமனுடனான பேச்சுவார்த்தையுடன் நேரடித் தொடர்பு கொண்டதல்ல என்றும் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் ஓமன் இணைந்து கப்பல்கள் செல்ல வேண்டிய பாதைகளை ஏற்கனவே தீர்மானித்துள்ளன. இதில் வரும் கப்பல்கள் ஈரானின் எல்லைப் பகுதி வழியாகவும், செல்லும் கப்பல்கள் ஓமனின் எல்லைப் பகுதி வழியாகவும் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் ஒரு எண்ணெய் கப்பல் ஏவுகணையால் இலக்கு வைக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இது பிராந்திய எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தைகள் இந்தச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.