ஜூனியர் கமிஷனட் அதிகாரிகளின் ஊதிய வழங்கலில் தாமதம் மற்றும் உரிமம் இல்லாத எக்ஸ்ரே இயந்திரங்கள் பயன்பாடு குறித்த CAG அறிக்கையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு (PAC) பாதுகாப்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு (PAC), பாதுகாப்பு அமைச்சகத்திடம் கடும் கேள்வி எழுப்பியுள்ளது. 2020-21 முதல் 2022-23 வரையிலான காலப்பகுதியில், ஊதியம் வழங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதை CAG அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சராசரியாக ஊதியம் செயலாக்கப்பட 68 முதல் 80 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், சுமார் 6 லட்சம் ஊதிய ஆணைகள் எந்த காரணமும் இன்றி கைவிடப்பட்டுள்ளன. ராணுவ மருத்துவமனைகளின் பராமரிப்பில் ஏற்பட்ட அலட்சியத்தால் லான்ஸ்டவுனில் ஒரு மருத்துவமனை பகுதி இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆறு மருத்துவமனைகளில் கதிர்வீச்சு பாதுகாப்பு உரிமம் இல்லாத எக்ஸ்ரே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மருந்து விநியோகக் குறைபாடுகள் மற்றும் மருத்துவமனை நவீனமயமாக்கல் குறித்த கேள்விகளையும் குழு எழுப்பியுள்ளது.