சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்த நிதியமைச்சர் மேரி வில்சன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளர்கள் நில உரிமையாளர்களாக மாற 'மண்ணின் மகள் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
தமிழக நிதியமைச்சர் என். மேரி வில்சன் புதன்கிழமை சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, வாழ்வாதாரத்தை உயர்த்த ₹300 கோடி செலவில் 'அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக்க ₹20 கோடி ஒதுக்கீட்டில் 'மண்ணின் மகள் திட்டம்' செயல்படுத்தப்படும்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான 'அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின்' கீழ் மாணவர் ஒருவருக்கு அதிகபட்சமாக ₹36 லட்சம் வரை வழங்கப்படும். இவ்வாண்டு இத்திட்டத்தின் மூலம் 362 மாணவர்கள் ₹131 கோடி செலவில் பயனடைவர். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில்முனைவை ஊக்குவிக்க 'வெற்றி தொழில்முனைவோர் திட்டம்' (₹75 கோடி) மற்றும் 'அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம்' (₹165 கோடி) ஆகியவை செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.