நிலவில் நிரந்தர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் நாசாவின் திட்டத்தில் இணைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் விண்வெளி இலக்குகளை அடைய உதவும்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் விண்வெளி ஒத்துழைப்பு ஒரு நிலையான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய இரு விண்வெளி முகமைகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. நிலவில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கான நிரந்தர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் 'மூன் பேஸ் புரோகிராமில்' இணைய இஸ்ரோவிடம் நாசா அழைப்பு விடுத்துள்ளது.
2028-ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த திட்டம் அமைகிறது. 2040-க்குள் நிலவில் மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ள இஸ்ரோவிற்கு, இந்தத் திட்டம் தொழில்நுட்ப ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் பெரும் உதவியாக இருக்கும். இருப்பினும், இஸ்ரோ தனது சொந்த இலக்குகளைத் தியாகம் செய்யாமல், நாசாவின் தொழில்நுட்பச் சூழலில் மட்டும் சிக்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.