கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) இந்தியாவில் ஒரு ஆஷஸ் டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக அறிவித்துள்ளது. CA தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன்பெர்க், பிசிசிஐயுடன் தங்கள் வலுவான உறவுகளைக் குறிப்பிட்டு, உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இதை கருத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 1882 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடர், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை நடத்தப்படுகிறது. வழக்கமாக, இந்த தொடரை ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மாறி மாறி நடத்துவது வழக்கம். இருப்பினும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA), இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரின் ஒரு போட்டியை இந்திய மண்ணில் நடத்தத் தயாராக இருப்பதாக சமிக்ஞை கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன்பெர்க், ஒரு பிபிசி பாட்காஸ்டில் இது குறித்து பேசினார். அவர், "இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் எங்கள் உறவு வலுவானது. அதேபோல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனும் (BCCI) எங்களுக்கு நல்ல உறவுகள் உள்ளன. இந்தியாவில் ஒரு ஆஷஸ் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இப்போதைக்கு நாங்கள் இது குறித்து எந்த திட்டங்களையும் வகுக்கவில்லை. ஆனால் இந்த விஷயம் எங்கள் பரிசீலனையில் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. உலகளவில் இந்த மூன்று அணிகளின் போட்டிகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கவும், டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும் நாங்கள் எப்போதும் முயற்சிப்போம்" என்று கிரீன்பெர்க் தெளிவுபடுத்தினார். முன்னதாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிக் பாஷ் லீக் (BBL) தொடரின் ஒரு போட்டி டிசம்பர் 12, 2026 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் இடையே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதேபோல், பிசிசிஐயும் ஆஸ்திரேலியாவில் சில ஐபிஎல் போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2027 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் அட்டவணையை இசிபி சமீபத்தில் அறிவித்தது, இது ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 2 வரை இங்கிலாந்தின் ட்ரெண்ட் பிரிட்ஜ், லார்ட்ஸ், எட்ஜ்பாஸ்டன், சவுதாம்ப்டன் மற்றும் ஓவல் மைதானங்களில் நடைபெறும். 2029-2030 சுழற்சியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு ஹோஸ்டிங் உரிமைகள் வரும், எனவே அப்போது இந்தியாவில் ஒரு போட்டி நடத்தப்பட்டால் ஆச்சரியமில்லை.