மெட்டா மற்றும் அதன் AI கண்ணாடிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தனியுரிமை சட்டங்களை மீறுவதாகக் கூறி ஜெர்மனியின் HateAid அமைப்பு குற்றவியல் புகாரைத் தாக்கல் செய்துள்ளது. இந்தச் சாதனங்கள் மக்களின் அனுமதியின்றி அவர்களைப் படம் பிடிக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெர்மனியில் மெட்டா மற்றும் அதன் AI கண்ணாடிகளை (குறிப்பாக Ray-Ban Meta Wayfarer) விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு ஜெர்மன் உரிமைக் குழுவினர் குற்றவியல் புகாரைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த சாதனங்கள் ஜெர்மனியின் டிஜிட்டல் தனியுரிமை சட்டங்களை மீறுவதாக HateAid அமைப்பு தெரிவித்துள்ளது.
HateAid நிர்வாக இயக்குனர் ஜோசபின் பால்லன் கூறுகையில், 'ஸ்மார்ட் கண்ணாடிகளிடமிருந்து தப்பிக்க இடமே இல்லை. எந்த நேரத்திலும் நீங்கள் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் பகிரப்படலாம் என்று எதிர்பார்க்க வேண்டியுள்ளது' என்றார். மெட்டா மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மீது பிராங்க்பர்ட் டிஜிட்டல் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தெரியாமலேயே வீடியோ எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சாதனங்களை விற்பனை செய்யத் தடை விதிக்கும் கூட்டாட்சி டிஜிட்டல் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் பெண்களைக் குறிவைத்து டிஜிட்டல் வன்முறையை அதிகரிக்கக்கூடும் என்றும் அமைப்பு எச்சரித்துள்ளது.