பிராட் பீக் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த மூன்று நேபாள மலையேற்ற வீரர்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை காத்மாண்டு வந்தடைந்தன. உயரத்தில் மீட்புப் பணிகளின் ஆபத்துகளை இது மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கடந்த மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பிராட் பீக் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த கிளி பெம்பா ஷெர்பா, கியாலு ஷெர்பா மற்றும் நிமா ஷெர்பா ஆகிய மூவரின் உடல்களும் செவ்வாய்க்கிழமை காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இவர்களின் உடல்கள் நேபாள மலையேற்ற சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டு, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு நேபாள வீரர் மற்றும் அமெரிக்க, சீன வீரர்களின் உடல்களை இன்னும் மீட்க முடியவில்லை. 8,051 மீட்டர் உயரம் கொண்ட பிராட் பீக் மலையின் கடினமான நிலப்பரப்பு மற்றும் வானிலை காரணமாக மீட்புப் பணிகள் பெரும் சவாலாக உள்ளன.