கான்வர் யாத்திரை அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, ஜூலை 26 முதல் ஹாப்பூரில் உள்ள அனைத்து இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியிலும் யாத்திரை பாதைகளில் அசைவ விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹாப்பூரில் கான்வர் யாத்திரையை முன்னிட்டு ஜூலை 26 முதல் அனைத்து இறைச்சி, மீன், முட்டை மற்றும் பிற அசைவ உணவகங்களை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. யாத்திரை தடையின்றி அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கவிதா மீனா தெரிவித்துள்ளார். விதிமீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலும், கான்வர் யாத்திரை பாதைகள் மற்றும் முகாம்களுக்கு அருகில் அசைவ உணவுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி (MCD) அங்கீகரிக்கப்படாத இறைச்சி கடைகளை மூடுமாறும், யாத்திரை பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 11 வரை டெல்லியில் 308 கான்வர் முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.