கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரத்தில் உள்ள 20 ஆண்டுகள் பழமையான ஒரு கட்டிடம் அதிர்வதாக உள்ளூர் மக்கள் புகார் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடம் உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரத்தில் உள்ள மேற்கு சம்பந்தம் சாலையில் அமைந்துள்ள மூன்று அடுக்குக் கட்டிடம் சரியும் நிலையில் இருப்பதாகக் கூறி மக்கள் அச்சமடைந்ததால் வியாழக்கிழமை மாலை பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடம் ஆடிக்கொண்டிருப்பதாக அருகில் வசிப்பவர்கள் புகார் அளித்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அந்த 20 ஆண்டு கால கட்டிடத்தில் நகை தயாரிப்புப் பிரிவுகளில் பணியாற்றி வந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

பொதுப்பணித் துறையைச் சேர்ந்த நிர்வாகப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கட்டிடத்தைப் பார்வையிட்டனர். கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஒரு கட்டிடக் கலைஞர் மூலம் ஆய்வு செய்து, அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கட்டிட உரிமையாளருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.