இரவில் அடிக்கடி பசி எடுப்பது அல்லது தூக்கத்திலிருந்து எழுந்து சாப்பிடுவது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இது 'நைட் ஈட்டிங் சிண்ட்ரோம்' எனப்படும் உணவுப் பிரச்சனையாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சில நேரங்களில் இரவில் பசி எடுப்பது இயல்பானது, ஆனால் ஒவ்வொரு இரவும் அதிகப்படியான பசி எடுப்பது மற்றும் தூக்கத்தைக் கெடுப்பது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். மருத்துவ மொழியில் இது 'நைட் ஈட்டிங் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்படுகிறது. இது தூக்கக் கோளாறுகளுடன் தொடர்புடைய ஒரு உணவு உண்ணும் ஒழுங்கற்ற நிலை (Eating Disorder) ஆகும்.
இந்த பாதிப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் இனிப்பு அல்லது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான சாக்லேட், பிஸ்கட் அல்லது சிப்ஸ்களை இரவில் தேடுவார்கள். இதனால் காலையில் எழுந்திருக்கும் போது சோர்வாக உணர்வதுடன், காலை உணவின் மீதான விருப்பமும் குறைகிறது. மன அழுத்தம், மரபணு காரணங்கள் அல்லது பகலில் போதுமான உணவு உட்கொள்ளாதது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்.
இதற்குத் தீர்வாக மருத்துவர்கள் 'காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி' அல்லது தசைத் தளர்வு முறைகளைப் பரிந்துரைக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படலாம். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.