கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல்வேறு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த மாத இறுதியில் இருந்து அமெரிக்காவின் பல நீர் விநியோக அமைப்புகள் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மினசோட்டா, அர்கன்சாஸ், ஜார்ஜியா, நியூ ஜெர்சி மற்றும் மிச்சிகன் உள்ளிட்ட சுமார் ஒரு டஜன் மாநிலங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் நீர் விநியோகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் அரசு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது, குறிப்பாக ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் நீர் பாதுகாப்பு அமைப்புகள் முன்னரே ஈரான் ஹேக்கர்கள் நீர் மற்றும் எரிசக்தித் துறையை இலக்கு வைப்பார்கள் என்று எச்சரித்திருந்தன. சில இடங்களில் நீர் அழுத்தம் குறைந்து, சுத்திகரிக்கப்படாத நீர் குழாய்களுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் சில நகரங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, குடிநீரைச் சேமிக்க அல்லது கொதிக்க வைத்துப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களின் முக்கிய நோக்கம் பொதுமக்களிடையே பீதியையும் பயத்தையும் உருவாக்குவதாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.