தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் மத்திய ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக சுமார் 2,00,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போர்டோ நகரின் புறநகர் பகுதிகளும் தீயின் பிடியில் சிக்கியுள்ளன.

பிரான்சின் போர்டோ நகரின் புறநகர் பகுதிகளில் பரவி வரும் பயங்கர காட்டுத்தீ காரணமாக சனிக்கிழமை அன்று மக்கள் வெளியேற்றப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிரோண்ட்டின் பிரீபெக்ட், போர்டோவின் மூன்று மேற்கு புறநகர் பகுதிகள் மற்றும் விமான நிலையப் பகுதியையும் காலியாக விடுமாறு உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் போராடினாலும், நிலைமை கட்டுப்பாட்டை மீறி வருவதால் மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட அதிக வெப்பம் இந்த தீயை மிக வேகமாகப் பரப்பியுள்ளது. பிரான்சின் ஜிரோண்ட்டில் 1,41,000 பேரும், ஸ்பெயினின் மத்தியப் பகுதியில் 60,000 பேரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஸ்பெயினில் தீயின் வேகம் மற்றும் தீவிரத்தால் அதை நேரடியாகக் கட்டுப்படுத்துவது கடினம் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.