சீனாவின் வளர்ந்து வரும் ராணுவ நடவடிக்கைகளை தனது முக்கிய பாதுகாப்பு சவாலாக ஜப்பான் விவரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரகப் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவின் உள் விவகாரங்களில் ஜப்பான் தலையிடுவதாக பெய்ஜிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில், சீனா டோக்கியோவின் மிகப்பெரிய மூலோபாய சவாலாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. தைவான் விவகாரம் குறித்தும் ஜப்பான் கருத்து தெரிவித்துள்ளதால், சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும், இதில் ஜப்பான் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த சூழலில், ஜப்பான் தனது ராணுவ வலிமையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் சுமார் 1,000 கிமீ தூரம் வரை தாக்கும் புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஜப்பான் காட்சிப்படுத்தியது. இண்டோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.